ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல மறுத்ததால் கூலித்தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கான்பூரில் இ-ரிக்க்ஷா ஓட்டுபவர் அஃப்சார் அகமது. 11-8-21 மாலை மூன்று மணி அளவில் ராம்கோபால் சவுராஹா பகுதியில் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்திய பகுதிக்கு அருகே தனது இரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த அஜய், அஜயின் மகன் டான், கேசு நேதா, ரமேஷ், ராணி மற்றும் எட்டு முதல் பத்து பேர்வரை அகமதுவை தாக்கி ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வைத்ததாக தெரிகிறது.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை உடனடியாக அப்சரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவத்தின் போது தாக்கப்பட்டவரின் மகளும் உடன் இருந்தார். இந்த சம்பவம் வீடியோவாக இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டது.
அதையடுத்து கலவரம், குற்றவியல் மிரட்டல் மற்றும் தானாக முன்வந்து காயப்படுத்தியதாக பர்ரா காவல் நிலையத்தில் ஐந்து முகம் தெரிந்த நபர்கள் மற்றும் சில அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அஜய், ராகுல் குமார் மற்றும் அமன் குப்தா ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவ வீடியோவில் காவி துணி அணிந்திருந்த சிலர் அப்சரை தாக்குகின்றனர். அவரை தாக்கும் காவி கும்பலிடம் அடிக்காதீர்கள் விட்டு விடுங்கள் என அப்சரின் மகள் கதறியது அனைவர் கண்களையும் குளமாக்கிவிட்டது. கடைசியில் அவர் காவல்துறையினரால் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக பேசிய தெற்கு கான்பூர் DCP ரவீனா தியாகி “ஜூலை 12 அன்று குரேஷா பேகம், ரமேஷ் மற்றும் அவரது மனைவி ராணி கவ்தம் மீது குச்சி பஸ்தி பகுதியில் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட திருமதி ராணி என்பவர் கொடுத்த புகாரின் கீழ் ஐபிசி பிரிவு 354 -ன் படி மற்றொரு தரப்பு சதாம், சல்மான் மற்றும் முகுல் ஆகியோருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய்யப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வழக்குகளிலும் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின் போது, திருமதி ராணி குற்றம் சாட்டப்பட்டவர்கள் தன்னை மதம் மாற கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.