26-12-21/19.45pm
சண்டிகர் : இஸ்லாமிய சிறுமியின் மனுவின் மீதான பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசின் திருமண வயது அதிகரிப்பு சட்டத்திற்கு முரணாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சண்டிகரை சேர்ந்த 17 வயது இஸ்லாமிய பெண் ஒருவர் ஒரு இந்து வாலிபரை காதல் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பவே அந்த பெண் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனு ஒன்றை அளித்திருந்தார். அதன் மீதான விசாரணையில் நீதிபதி ஹார்நரேஷ் சிங் கில் இன்று தீர்ப்பளித்தார்.

அவரது தீர்ப்பில் ” முஸ்லீம் பெண்ணின் திருமணம் இஸ்லாமிய தனி நபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு பெண் பூப்பெய்தவுடனேயே அவள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள். மேலும் சர் தின்ஷா முல்லாவின் முகமதிய சட்டத்தின் கோட்பாடுகள் புத்தகத்தின் 195 பிரிவின்படி மனுதாரர் 17 வயதுடையவராக இருப்பதாலும் அவரது பங்குதாரர் 33 வயது உடையவர் என்பதாலும் இந்த திருமணம் செல்லும். அவர்களின் அடிப்படை உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது” என கூறியதோடு தம்பதிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.

மத்திய அரசு பெண்களின் திருமண வயது 21 என அறிவித்திருக்கும் இந்த வேளையில் உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. சிறுபான்மையினருக்கு ஒரு சட்டம் பெரும்பான்மையினருக்கு ஒரு சட்டமா எனவும் இஸ்லாமிய பெண்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
…உங்கள் பீமா