Sunday, May 3, 2026
Home > செய்திகள் > பதவியேற்ற மறுநாளே சோகம்..! துணைமுதல்வர் மகனுக்கு நேர்ந்த விபரீதம்..!

பதவியேற்ற மறுநாளே சோகம்..! துணைமுதல்வர் மகனுக்கு நேர்ந்த விபரீதம்..!

27-3-22/10.04AM

உத்திரபிரதேசம் : உத்திர பிரதேச மாநில துணைமுதல்வராக கடந்த வெள்ளிக்கிழமை பதவியேற்றவர் கேசவ் பிரசாத் மௌர்யா. இவரது மகன் யோகேஷ் குமார் மௌரியா. இவர் நேற்று மாலை திடீர் விபத்தில் சிக்கினார். இது ஏதேனும் திட்டமிட்ட செயலா அல்லது தற்செயலா என விசாரணை நடைபெற்றுவருகிறது.

யோகேஷ் குமார் மௌரியா நேற்று மதியம் ஜலான் மாவட்டம் ஆலம்பூர் பைபாஸ் வழியே தனது பார்ச்யூன் எஸ்.யூ.வி காரில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார். இவர்கள் மத்தியபிரதேசத்தில் உள்ள டாடியாவில் அமைந்திருக்கும் பீதாம்பர பீடத்தை தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர். கல்பி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கார் எதிர்பாராவிதமாக நெடுஞ்சாலையில் எதிரே வந்த டிராக்டரில் மோதியது.

இதில் யாருக்கும் பெரிய சேதமில்லை. சிறுசிறு காயங்களுடன் உயிர்தப்பினர். யோகேஷ் உடனடியாக பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

டாக்டர்கள் குழு வரவழைக்கப்பட்டு முதலுதவிகள் செய்யப்பட்டது. உடனடியாக மாவட்ட மாஜிஸ்திரேட் ப்ரியங்கா ரஞ்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்தார்.

இதுகுறித்து துணை முதல்வர் தனது ட்விட்டரில் “பீதாம்பர மா மற்றும் உங்கள் ஆசிர்வாதங்களுடன் எனது மகன் பாதுகாப்பாக உள்ளார். மருத்துவர் குழுவின் ஆலோசனைக்கு பிறகு மீண்டும் மா பீதாம்பர மடத்திற்கு சென்றெ தரிசனம் செய்ய இருக்கிறார்” என குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் பிஜேபி எம்.எல்.ஏ, ஒருவரின் மகன் பலத்த விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

….உங்கள் பீமா