அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன் தினம் சென்னையில் நடந்தது.

இந்த படத்தில் ஒரு வேடத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ரகுபதியும் இந்த நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்தார். அவர் பின்வரிசையில் அமர்ந்திருக்க, அவருக்கு பின்னால் ரசிகர் கூட்டம் அலைகடலென திரண்டிருந்தது.
அப்போது ஒரு ரசிகர் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஐஸ்வர்யாவிடம் தவறாக நடந்துள்ளார். அவரை பிடித்த ஐஸ்வர்யா அவரை கண்ணா பின்னாவென திட்டி அவரை காலில் விழவைத்து மன்னிப்புக் கேட்க வைத்தார். அப்படியும் கோபம் அடங்காமல் “எங்கடா ஓடுற நாயே…” என தலையில் வேகமாக அடித்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இது சம்மந்தமாக இப்போது விளக்கம் அளித்துள்ள ஐஸ்வர்யா “கூட்டத்தில் ஒருவன் என்னிடம் தவறாக நடந்துகொண்டு ஓடப்பார்த்தான். ஆனால் அவனை பிடித்து நான் அடித்தேன். ஒரு பெண்ணுடைய அங்கத்தைப் பிடிக்க அவனுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும். நம்மை சுற்றி எத்தனையோ அரக்கர்கள் இதுபோல இருக்கிறார்கள். இதுபோன்றவர்களின் அருகில் இருக்க நான் மிகவும் பயப்படுகிறேன்” என கோபமாக பேசியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஐஸ்வர்யா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போது கூல் சுரேஷ் அவருக்கு அநாகரிகமாக மாலை போட்டு அப்போதும் அவர் இதுபோல கோபத்தை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 3, 2024
