இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.
ஒருவழியாக இப்போது இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது. 6 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ்ப் படங்களின் எல்லா வசூல் சாதனைகளையும் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. படம் ரிலீஸாவதற்கு முன்பு அளித்த நேர்காணலில் 6 மாதத்துக்குப் பிறகு இரண்டாம் பாகம் ரிலீஸாகும் என மணிரத்னம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இப்போது இரண்டாம் பாக ரிலீஸ் குறித்து ஒரு தகவல் பரவி வருகிறது. முதல் பாகம் எப்படி விடுமுறை நாட்களை குறிவைத்து ரிலீஸ் ஆனதோ அதுபோல இரண்டாம் பாகமும் கோடை விடுமுறை நாட்களை குறிவைத்து தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. இதற்கான பணிகளை இப்போதே படக்குழு தொடங்கிவிட்டதாம்.
