கொரோனாவுக்குப் பிறகு அனைத்து பிராந்திய மொழிகளின் மார்க்கெட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் அது சின்ன பட்ஜெட் படங்களை தூக்கிவிடுவதற்குப் பதில் பெரிய பட்ஜெட் படங்களையே மேலும் பெரிய பட்ஜெட் படங்களாக்குகின்றன. இதனால் தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு இரண்டு 500 கோடி வசூலை படங்கள் குவித்தன.
இதற்கெல்லாம் காரணம் ஓடிடியின் வருகைதான். நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜி 5, சோனி லிவ் போன்ற முன்னணி ஓடிடி நிறுவனங்கள் மிகப்பெரிய தொகை கொடுத்து அந்த படங்களை வாங்கிக் கொள்கின்றன. பெரிய நடிகர் படங்களை 100 கோடி ரூபாய்க்கு அதிகமாகக் கூட விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றன. இதனால் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ரஜினி, விஜய், கமல் மற்றும் அஜித் ஆகியோரின் சம்பளம் எல்லாம் 150 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. அதே போல நடிகைகளில் நயன்தாராவின் சம்பளம் 10 கோடி ரூபாயை தொட்டுள்ளது. இந்நிலையில் இப்போது ஓடிடி நிறுவனங்கள் கொடுத்து வாங்கும் விலைக்கு ஏற்ப அந்த படங்கள் வருவாயைக் கொண்டு வருவதில்லை என்பதால் இனிமேல் படங்களுக்கான தொகையைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் இனிமேல் பெரிய நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சம்பளம் கணிசமாக குறைக்கப்படும் என சொல்லப்படுகிறது. இது நடிகர் நடிகைகளின் சம்பளத்தை வெகுவாகக் கட்டுப்படுத்தும் என தெரிகிறது.
