சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் தன்னுடைய அபாரமான நகைச்சுவை பேச்சாற்றாலும், திறமையாலும் தமிழ் சினிமாவில் நுழைந்தார். முதலில் நகைச்சுவை வேடத்தில் நடித்த அவர் அதன் பின்னர் கதாநாயகனாகி வெற்றிப் படங்களைக் கொடுத்தார். அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
இதையடுத்து தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அவரின் பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்துள்ளது. இந்த படத்துக்குப் பிறகு அவர் மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த பட இயக்குனர் அஸ்வினோடு இப்போது சிவகார்த்திகேயனுக்கு கருத்து வேறுபாடு எழுந்து ஷூட்டிங் சில நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் படமாக்கலில் தலையிட்டு காட்சிகளை மாற்றும்படி கூறுவதுதான் இந்த மோதலுக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இப்போது பிரச்சனை எல்லாம் முடிந்து சுமூகமாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை மிகப்பெரிய தொகைக் கொடுத்து சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படுதோல்வி அடைந்தாலும் , அவரது படங்களுக்கு தொலைக்காட்சியில் நல்ல டிமாண்ட் இருப்பதால் இந்த தொகை கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
