பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுப்படம் பொன்னியின் செல்வன். அதை ஏற்கனவே எம் ஜி ஆர் மற்றும் கமல் ஆகியோர் படமாக்க முயன்று கைவிட்டு விட்டனர். இயக்குனர் மணிரத்னமே கூட சில ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து தொடங்கி பின்னர் கைவிட்டார்.
இந்நிலையில் இப்போது 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக உருவாகி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிவிட்டது. இந்த படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதாலும், இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகள் நடந்ததாலும், படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்தது.
கிட்டத்தட்ட 3 நாட்களில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு மேல் உலகளவில் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை எடுக்க விரும்பியவரான கமல்ஹாசன் நேற்று சென்னையில் இந்த படத்தைப் பார்த்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தனது விக்ரம் படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் கடக்கும் என பெருந்தன்மையாகக் கூறினார். மேலும் அதைக் கொண்டாடவே தான் இங்கு வந்துள்ளதாகவும் பேசினார்.
மேலும் பேசிய அவர் “தமிழ் சினிமாவின் பொற்காலம் தொடங்கிவிட்டது” எனக் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது நடிகர்கள் கார்த்தி, விக்ரம் மற்றும் லைகா தமிழ்க்குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.