விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் காலை 9 மணிக்குக் காட்சிகள் தொடங்கிய நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகள் ரிலீஸாகி ஒரு ஷோ முடிந்துள்ளது. தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து படத்தைப் பார்த்து சமூகவலைதளங்களில் தங்கள் விமர்சனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்போது தமிழகத்தில் முதல் காட்சிகள் முடிந்துள்ள நிலையில் கலவையான விமர்சனங்கள் வர தொடங்கியுள்ளன. படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் ஆஹா ஓஹோ என சொல்லி வந்தாலும், டிவிட்டரில் பொதுவான ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஆனாலும் விஜய் ரசிகர்கள் அடித்து பிடித்து எப்படியாவது படத்தைப் பார்த்துவிட வேண்டுமென ஆர்வத்தில் உள்ளனர். அப்படிப்பட்ட விஜய் ரசிகர் ஒருவருக்கு விபரீதமான சம்பவம் ஒன்று கிருஷ்ணகிரியில் நடந்துள்ளது. லியோ படத்துக்கு டிக்கெட் கிடைக்காத விரக்தியில் அவர் திரையரங்கின் பின்புறம் சுவர் ஏறிக் குதித்துள்ளார். இதில் அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவரை அங்கிருந்து மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.