Thursday, April 16, 2026
Home > Cinema > வாய் பேச முடியாதவரையே பேச வைத்த சினிமா… ஆண்பாவம் படத்தில் இப்படி சுவாரஸ்யம் இருக்கா?

வாய் பேச முடியாதவரையே பேச வைத்த சினிமா… ஆண்பாவம் படத்தில் இப்படி சுவாரஸ்யம் இருக்கா?

தமிழ்நாட்டு கிராம வாழ்வியலை மிக சிறப்பாகவும், எதார்த்தமாகவும் சொன்ன படம் ஆண்பாவம். இயக்குனர் பாண்டியராஜன் இயக்கிய இரண்டாவது படமான இதில், பாண்டியன், ரேவதி, சீதா, வி கே ராமசாமி என பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற காதல் கசக்குதய்யா பாடல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆனது. படத்துக்காக இளையராஜா அமைத்த பின்னணி இசை இன்றளவும் பேசப்படும் ஒன்றாக உள்ளது.

வெளியாகி 35 ஆண்டுகளுக்கு மேலாகியும் இப்போது தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்த்து சிலாகித்து பேசுபவர்கள் ஏராளமாக உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனரான பாண்டியராஜன் ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

படத்தில் ரேவதி கிணற்றில் விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பார். அவரை பரிசோதிக்கும் மருத்துவர் தலையில் பெரிய அடி பட்டிருப்பதால், இனிமேல் இந்த பெண்ணால் பேச முடியாது என சொல்வார். இதில் நெகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அந்த மருத்துவர் உண்மையில் வாய் பேச முடியாதவராம். பாண்டியராஜனின் நண்பரான அவரை ஷூட்டிங்கில் வாயசைக்க வைத்து பின்னர் டப்பிங்கில் அந்த வசனங்களைப் பொருத்தினாராம். திரையரங்கில் அந்த காட்சியில் தான் பேசுவதை பார்த்த அந்த நண்பர் கண்ணீரோடு நெகிழ்ந்து பாண்டியராஜனுக்கு நன்றி சொன்னாராம். இந்த தகவல் சினிமா ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை உருவாக்கி உள்ளது.