விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க, தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். முதல் முதலாக விஜய் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உருவாகி வரும் அதிக பட்ஜெட் கொண்ட படமாக வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தெலுங்கிலும் வார்சாடு என்ற பெயரில் உருவாகி வருகிறது.
பொங்கலுக்கு அஜித்தின் துணிவோடு மோதும் வாரிசு படத்தின் இறுதிகட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. விரைவில் ஐதராபாத்தில் 10 நாட்கள் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சென்னையில் நடந்த படப்பிடிப்புக்கு செய்தி சேகரிக்க சென்ற ஒரு செய்தியாளர், படப்பிடிப்பு தளத்தில் அனுமதி இன்றி ஆயிரக்கணக்கான விலங்குகளை வைத்து ஷூட் செய்வதாகவும், அதனை வீடியோ எடுக்க வேண்டும் என்பதற்காக ட்ரோன் கேமராவை பறக்கவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அனுமதி இன்றி ட்ரோன் பறக்க விட்டதால், படப்பிடிப்புத் தளத்தை சேர்ந்த ஊழியர்கள் செய்தியாளர் மற்றும் கேமரா மேனை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் இருதரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த விஷயம் இப்போது பரபரப்பாக பேசப்படும் நிலையில் வாரிசு படத்தில் அனுமதி வாங்காமல் விலங்குகளை பயன்படுத்தியது சம்மந்தமாக விலங்குகள் நலவாரியம் தானாக முன் வந்து விசாரணையில் இறங்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதனால் சென்சார் பிரச்சனையில் வாரிசு திரைப்படம் சிக்கலாம் என சொல்லப்படுகிறது.