ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில் மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் நடிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக வெளியாகியுள்ளது ஜப்பான் திரைப்படம். கார்த்தியின் 25 ஆவது படம் என்பதால் மிகப்பெரிய அளவில் ப்ரமோஷன்கள் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸானதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் படம் நேற்று ரிலீஸானது முதல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. நகைக்கடைகளை ஓட்டை போட்டு கொள்ளையடிக்கும் திருவாரூர் முருகனின் வாழ்க்கை கதையை ஒட்டி படமாக்கப்பட்டுள்ளது ஜப்பான் திரைப்படம்.
நகைக்கடைகளை கொள்ளையடிப்பதில் கில்லாடியான ஜப்பான் மீது ஒரு நகைக்கடையில் 200 கோடி கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டு விழுகிறது. ஆனால் அதை தான் கொள்ளையடிக்கவில்லை எனக் கூறி உண்மையான கொள்ளைக் காரன் யார் என்பது தனக்கு தெரியும் எனக் கூறுகிறார் ஜப்பான். உண்மையான கொள்ளைக் காரன் கண்டுபிடிக்கப்பட்டானா? ஜப்பானுக்கு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
வித்தியாசமான கெட்டப் மற்றும் உடல்மொழியோடு வரும் கார்த்தியின் நடிப்பு ஆரம்பத்தில் ஈர்த்தாலும் ஒரு கட்டத்தில் அவரின் வசன உச்சரிப்பு சலிப்பை கொடுக்கிறது. இரண்டாம் பாதியில் பல இடங்களில் ரசிகர்கள் சீட்களில் வளைந்து நெளிந்து சிரமப்படும் அளவுக்கு திரைக்கதை தொய்வாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் படத்தை கரைசேர்ப்பது கார்த்திதான். அனு இம்மானுவேலுக்கு சொல்லிக் கொள்ளும்படி நடிப்பதற்கான ஸ்கோப் இல்லை.
க்ளைமேக்ஸில் சொல்லபப்டும் அந்த டிவிஸ்ட்டுக்காக அவ்வளவு நேரம் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார் இயக்குனர். படத்தில் பாடல்களோ பின்னனி இசையோ ரசிகர்களை கவரவில்லை. ஜி வி பிரகாஷ் ஏமாற்றிவிட்டார். ஒளிப்பதிவு சிறப்பாக இருந்தாலும், எடிட்டர் இன்னும் கொஞ்சம் காட்சிகளை தூக்கி படத்தை ட்ரிம் ஆக்கி இருக்கலாம்.
மொத்தத்தில் கார்த்தியின் 25 ஆவது படம் ரசிகர்களுக்கு பாதி திருப்தியை மட்டுமே கொடுத்துள்ளது.
