நேரம், பிரேமம் என அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து கலக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். அதிலும் அவர் இயக்கிய மலையாள படமான பிரேமம் சென்னையில் ஒரு 100 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. ஆனால் அதன் பிறகு அவர் 7 ஆண்டுகள் படமே இயக்கவில்லை.
அதன் பின்னர் அவர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். அந்த படம் அட்டர் ப்ளாப் ஆனது. அதன் பின்னர் இப்போது நடன இயக்குனர் சாண்டியை கதாநாயகனாக வைத்து கிஃப்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் திடீரென அவர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் தான் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து பரபரப்பைக் கிளப்பினார். அதில் “எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ் ஆர்டர் இருப்பதை கண்டுபிடித்துள்ளேன். அதனால் திரையரங்குக்காக படங்கள் இயக்குவதை நான் நிறுத்துகிறேன். யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. இனிமேல் பாடல் வீடியோக்கள், ஓடிடிக்கான படங்கள் மட்டும் இயக்க போகிறேன்.
என்னால் சினிமாவை விட்டு விலகமுடியாது. ஆனால் எனக்கு வேறு வழியில்லை. உடல்நலம் பலகீனமாகவோ அல்லது கணிக்க முடியாததாகவோ இருக்கும்போது இடைவேளை பன்ச் போல ஒரு டிவிஸ்ட் கொண்டுவருகிறது” எனக் கூறியுள்ளார். இந்த பதிவை அவர் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே பின்னர் அதை நீக்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
